ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்


வாஷிங்டன்:  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

 
 
 

Label

Label

Labels