சிங்களப் படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு!


இலங்கை நடிகையான பூஜா சிங்களப் படத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் அமைப்புகள் சில ஏற்கெனவே இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது இந்து மக்கள் கட்சியும் இதுகுறித்த தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜே.ஜே. படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா. நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாகவும் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு, அங்கேயே பணியாற்றுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த கிசுகிசுக்களை பூஜை மறுத்து வருகிறார்.

தற்போது சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார்.

இநத தகவல் வெளியானதால், பூஜாவுக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

“இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. சிங்கள மொழி படத்தில் பூஜா நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழ் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்போம். பூஜா படங்களையும் புறக்கணிப்போம்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 

Label

Label

Labels