என்.எஸ்.கிருஷ்ணனின் மகளிடம் நில மோசடி: மதுரை ஆசாமிகள் மீது வழக்கு


மதுரை: நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மகளின் நிலத்தை மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவம்மாள் (வயது 63). இவர் தமிழ் சினிமாவின் சாதனையாளர் மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகள் ஆவார். இவரது கணவர் வரதராஜன். சென்னையில் வசித்த போது, இவர்களிடம் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த நாகராஜன், அவரது மனைவி சந்திரா மற்றும் உறவினர்கள் தேவி காமாட்சி, முருகன் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வண்டியூரில் குறைந்த விலைக்கு இடம் இருப்பதாக கூறி, 3.42 சென்ட் நிலத்தை வடிவம்மாளுக்கு விலைக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை பாண்டி பஜாரில் நல்ல இடம் ஒன்று விலைக்கு வருவதாக நாகராஜன் வடிவம்மாளிடம் கூறியுள்ளார். இதை நம்பிய வடிவம்மாள் மதுரை வண்டியூர் இடத்தை விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தின் மூலம் சென்னை இடத்தை வாங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக வண்டியூர் இடத்தை விற்க, நாகராஜனுக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த பவரைப் பயன்படுத்தி நாகராஜன் வண்டியூர் இடத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்து விட்டதாகவும், இதற்கு சந்திரா, தேவி காமாட்சி, முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் வடிவம்மாள் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாகராஜன், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 

Label

Label

Labels